சண்டிகர்; நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதால் மட்டுமே, மணமகளின் சம்மதம் இன்றி, அவரை பாலியல் ரீதியாக தொடுவதற்கு மணமகனுக்கு எந்த உரிமையோ, சுதந்திரமோ கிடைக்காது என்று பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஹரியாணா மாநிலம் கர்னல் மாவட்டத்தைச் சேர்ந்த நபர் மீது பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், தனது உத்தரவில் இதனைக் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிக்க.. என்ன ஆனது நித்யானந்தாவுக்கு? இலங்கைக்கு பறந்த அவசரக் கடிதம்
இது தொடர்பான புகாரில் கூறப்பட்டிருப்பதாவது, ரோகா எனப்படும் நிச்சயதார்த்தம் கடந்த ஜனவரியில் நடந்துள்ளது. குடும்ப உறுப்பினர்களின் சம்மதத்துடன் டிசம்பரில் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் முன்ஜாமீன் கோரிய நபர், பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்துள்ளார். பாலியல் உறவுக்கு அழைத்துள்ளார். ஆனால் அப்பெண் மறுத்துவிட்டார். மீண்டும் கடந்த மே மாதம் மற்றும் ஜூன் மாதமும் இருவரும் சந்தித்துள்ளனர். அப்போதும் இதேதான் நடந்துள்ளது.
இதற்கிடையே, ஜூலை மாதம் மனுதாரர், அப்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அதனை விடியோவும் எடுத்துக் கொண்டுள்ளார். இந்த நிலையில், மணமகனின் தாயார், பெண் வீட்டாரைத் தொடர்பு கொண்டு திருமணத்தை நிறுத்துவதாகக் கூறியுள்ளார்.
இது குறித்து நீதிமன்றத்தில் கூறிய மனுதாரர் தரப்பு, மணமகளுக்கு வேறொரு நபருடன் நட்பு இருந்ததைக் கண்டுபிடித்ததால்தான் திருமணத்தை நிறுத்தியதாகக் கூறியிருந்தனர்.
இது குறித்து அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இரு தரப்பினரும் அப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்ற அடிப்படையில் வாட்ஸ்ஆப்பில் பேசியிருக்கலாம். ஆனால், மனுதாரர் செய்திருப்பது, அது பாதிக்கப்பட்டவரின் அனுமதியுடன் நடந்திருந்தாலும் கூட சரியாகாது.
அதுபோல, திருமணத்தை நிறுத்தியதற்கு மனுதாரர் தரப்பில் சரியான ஆதாரங்கள் காட்டப்படவில்லை என்றும் உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது.