பெங்களூரு: கப்பல் போன்ற கார்களில் சென்று கொண்டிருந்த பணக்காரர்கள் எல்லாம் படகில் பயணிக்கும் நிலைக்குத் தள்ளிய கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக, பெங்களூருவில் விடுதி அறைகளின் வாடகை விண்ணைத் தொட்டுள்ளது.
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது, வாசலில் நிறுத்தியிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாகனங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. செய்வதறியாது திகைத்து நின்ற பெங்களூரு வாழ் பணக்காரர்கள் உடனடியாக நட்சத்திர மற்றும் விடுதி அறைகளை ஒரு வாரத்துக்கு முன்பதிவு செய்து குடியேறிவிட்டனர்.
இதனால், விடுதிக் கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது, ஒரு நாள் வாடகை ரூ.10 ஆயிரம் என்ற நிலையில், தற்போது அதே அறை ரூ.30 முதல் 40 ஆயிரத்துக்கு கிடைக்கிறது.
இதையும் படிக்க.. என்ன ஆனது நித்யானந்தாவுக்கு? இலங்கைக்கு பறந்த அவசரக் கடிதம்
ஒரு நாளுக்கு பல லட்சம் செலவிட்டு விடுதிகளில் தங்கியிருப்பதாக மிகப்பெரிய பணக்காரர்கள் கூட கண்ணீர் சிந்தி வருகிறார்கள். முதல் தளத்தில் இருந்ததால் நாங்கள் தப்பித்துக் கொள்ளலாம் என்றுதான் நினைத்தோம். ஆனால் மின்சாரம் இல்லாமல் எப்படி இருப்பது என்று விடுதிக்கு இடம்பெயர்ந்து விட்ட நிலையை சிலர் பகிர்ந்து கொண்டனர்.
ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்த கார்கள் கூட முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.