
கோப்புப் படம்
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தினை இந்திரா காந்தி நகர வேலைவாய்ப்புத் திட்டம் என்ற பெயரில் நகரங்களில் வசிப்பவர்களுக்கு ராஜஸ்தான் மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தினை ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் இன்று ( செப்டம்பர் 9) தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் நகரங்களில் வசிக்கும் மக்களுக்கும் ஒரு ஆண்டிற்கு குறைந்தது 100 நாட்கள் வேலைவாய்ப்பு உருவாகும்.
இந்த திட்டம் குறித்து ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறியதாவது: “ இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க திட்டம். பணவீக்கம் அதிகமாக நிலவும் இந்த தருணத்தில் இந்தத் திட்டத்தின் மூலம் உருவாகும் வேலைவாய்ப்பு அவர்களுக்கு போதிய வருமானத்தை அளிக்கும். மற்ற மாநிலங்களில் இருக்கும் திட்டங்களை ஆராய்ந்த பிறகே இந்தப் புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நாங்கள் அண்மையில் பணவீக்கத்திற்கு எதிராக மத்திய அரசை எதிர்த்து தில்லியில் பேரணியாக சென்றோம். மத்திய அரசிற்கு எதிரான இந்த போராட்டம் தொடரும்.” என்றார்.
இதையும் படிக்க: புஷ்பா-2 திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி: என்ன கதாபாத்திரம் தெரியுமா?
முன்னதாக, நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் சாந்தி தரிவால், இந்தத் திட்டத்தின் கீழ் 4 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாகவும் அதில் 2.5 லட்சம் பேருக்கு வேலை பார்ப்பதற்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தத் திட்டம் தொடங்கப்பட்டபோது ஜெய்ப்பூர் மாநகராட்சி மேயர் முனேஷ் குர்ஜார் மற்றும் சமூக நலத்துறை அமைப்பின் தலைவர் அர்ச்சனா ஷர்மா ஆகியோர் உடனிருந்தனர்.