பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன உரிமையை மாநில அரசுக்கு வழங்க முடியாது என கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமிக்கப்பட்டதில் விதிமீறல் நடைபெற்றுள்ளதாக ஏற்கெனவே மாநில முதல்வர் பினராயி விஜயன் ஆளுநர் மீது குற்றம்சாட்டியிருந்த நிலையில் தற்போது இதுகுறித்து ஆளுநர் ஆரிப் முகமதுகான் விளக்கமளித்துள்ளார்.
தன் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது எனத் தெரிவித்த அவர் துணைவேந்தர் நியமன உரிமையை மாநில அரசுக்கு வழங்குவது ஆளுநரின் நிர்வாக நடவடிக்கையில் தலையிடுவதை அனுமதிப்பது போன்றது எனக் குறிப்பிட்டார்.
சமீபத்தில் கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட துணைவேந்தர் நியமனத்தை மாநில அரசை மேற்கொள்ளும் சட்ட மசோதா குறித்து பேசிய ஆளுநர் எதுவாக இருந்தாலும் தகுதியின் அடிப்படையிலேயே நியமனம் நடைபெற வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதுவரை மாநில அரசின் சட்ட மசோதாவை பார்க்கவில்லை எனத் தெரிவித்துள்ள ஆரிப் முகமதுகான் இந்த விவகாரத்தில் வெளிப்படையாக முதல்வர் பினராயி விஜயன் நேரிடையாக குற்றம்சாட்டி மோதுவதை வரவேற்பதாகத் தெரிவித்தார்.