கடந்த ஜூலையில் மோடியைக் கொல்லத் திட்டமிடப்பட்டதா? என்ஐஏ திடுக்‍கிடும் தகவல்

பாட்னாவில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்‍கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மேடியை கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்ததாக தேசிய புலனாய்வு முகமை கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
கடந்த ஜூலையில் மோடியைக் கொல்லத் திட்டமிடப்பட்டதா? என்ஐஏ திடுக்‍கிடும் தகவல்

புதுதில்லி: பிகார் மாநிலம், பாட்னாவில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்‍கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மேடியை கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்ததாக தேசிய புலனாய்வு முகமை கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுதல், தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆள் சோ்த்தல், பயிற்சி அளித்தல் உள்ளிட்ட புகாரின்பேரில், தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத் துறையினா் இணைந்து நாட்டின் 15க்கும் மேற்பட்ட  மாநிலங்களில் பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா, எஸ்டிபிஐ கட்சி நிா்வாகிகளின் வீடுகளில் வியாழக்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டனா்.

கட்சிகளைச் சோ்ந்த முக்கியத் தலைவா்கள் 106 பேரை கைது செய்த என்ஐஏ அதிகாரிகள் பல முக்கியமான ஆவணங்கள், புத்தகங்கள், கணினிகள், மடிக்கணினிகள், கைப்பேசிகள் ஆகியவற்றை கைப்பற்றினா். சுமார் 200 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சோதனையின் போாது ஒட்டுமொத்த தொடர்புகளையும் கண்டறிய வேண்டும் என்பதற்காக, இந்த சோதனையில் ஈடுபடுள்ள அனைத்து அதிகாரிகளும் சோதனையின்போது அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் என்ஐஏ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் நாடு முழுவதும் பிஎஃப்ஐ அலுவலகங்களில் என்ஐஏ நடத்திய சோதனை நடத்தி உள்ள நிலையில், முஸ்லிம் அமைப்பினர், இளைஞா்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

கேரளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தில் மாநிலத்தில் பல இடங்களில் வன்முறை நிகழ்ந்தது. இந்நிலையில், முஸ்லிம் இளைஞா்கள் அமைதிகாக்க வேண்டும் என்று பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளன.

இந்நிலையில், பிகார் மாநிலம், பாட்னாவில் கடந்த ஜூலை மாதம் 12 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்‍கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மேடியை பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்ததாகவும், இதற்காக ஒரு பயிற்சி முகாமை ஏற்பாடு செய்ததாகவும் தேசிய புலனாய்வு முகமை அதிர்ச்சியை தகவலை வெளியிட்டுள்ளது. 

மேலும், தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கத்துடன் உத்தரப்பிரதேசத்தில் உள்ள முக்கியமான இடங்கள் மற்றும் தனிநபர்கள் மீது ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்த பயங்கரவாத குழுக்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களை சேகரித்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.

கேரளத்தில் கைது செய்யப்பட்ட சாதிக் என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இதுகுறித்த தகவல் தெரியவந்ததாக தேதிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. 

மேலும், பல ஆண்டுகளாக இந்த அமைப்புகளால் ரூ. 120 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், இவை பெரும்பாலும் ரொக்கமாக வசூலிக்கப்பட்டு நாடு முழுவதும் கலவரங்கள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. 

விசாரணையின் போது, பிஎஃப்ஐ மற்றும் அதன் உறுப்பினர்களின் பல்வேறு வங்கிக் கணக்குகள், குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.

குற்றவியல் சதி மற்றும் "தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியவை" பிஎஃப்ஐ செயல்பாடுகள் என்று தேதிய புலனாய்வு முகமை குற்றம்சாட்டியுள்ளது.

இதனிடையே, பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா, இந்தியா, எஸ்டிபிஐ கட்சியினர் மீதான தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் அமலாக்கத் துறையினா் இணைந்து நடத்திய நடவடிக்கைக்கு  'ஆபரேஷன் ஆக்டோபஸ்' என பெயர் வைக்கப்பட்டதாக என்ஐஏ தகவல்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com