கியூட் முதுகலை தேர்வு முடிகள் நாளை திங்கள்கிழமை (செப்.26) மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று யுஜிசி தலைவர் ஜெகதேஷ் குமார் தெரிவித்துள்ளார்
புதிய கல்வி கொள்கையின்படி மத்திய பல்கலைக்கழகங்களில் கலை மற்றும் அறிவியல், பிஸ்னஸ் மேனேஜ்மென்ட் துறைகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு கியூட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.
நாடு முழுவதும் 90 பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு 14,90,283 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
கியூட் முதுகலை தேர்வு செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 11 வரை நாடு முழுவதும் 50 தேர்வு மையங்களில் நடைபெற்றது. நாடு முழுவதும் 9,68,201 மாணவர்கள் தேர்வு எழுதினர். தமிழ், ஆங்கிலம் உள்பட 13 இந்திய மொழிகளில் தேர்வு நடைபெற்றது.
கியூட் முதுகலை தேர்வுக்கான இறுதி விடைத்தாள் நேற்று சனிக்கிழமை(செப்.24) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியானது.
இந்நிலையில், கியூட் முதுகலை தேர்வு முடிவுகள் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகிறது என யுஜிசி தலைவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து யுஜிசி தலைவர் ஜெகதேஷ் குமார் தனது ட்விட்டர் பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது:
மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான கியூட் முதுகலை படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வுக்கான முடிவு நாளை திங்கள்கிழமை (செப்.26) மாலை 4 மணியளவில் அதிகாரப்பூர்வ இணையதளமான cuet.nta.nic.in இல் தேசிய தேர்வு முகமை வெளியிடுகிறது. மாணவர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, சேர்க்கை தொடர்பான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.