நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), நிறுவனம், தனது ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யும் நடைமுறையை மாற்ற முன்வந்துள்ளது.
கரோனா பேரிடர் காரணமாக, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், அதனை முடிவுக்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. ராஜ ராஜ சோழன் யார் தெரியுமா? ஆவேசப் பேச்சால் அசர வைத்த விக்ரம்
அதன்படி, இனியும் தொடர்ந்து வீட்டிலிருந்தே பணியாற்றும் நடைமுறையை ஊழியர்கள் தொடர முடியாது என்றே தெரிகிறது. அண்மையில், இது தொடர்பாக நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும், ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.
அதன்படி, ஊழியர்கள் கட்டாயமாக வாரத்தில் குறைந்தது மூன்று நாள்களாவது அலுவலகம் வர வேண்டும். ஏற்கனவே மூத்த ஊழியர்களும், குழுத் தலைவர்களும் அலுவலகத்துக்கு வந்து பணியாற்றும் நடைமுறையைத் தொடங்கிவிட்டனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட மின்னஞ்சலில், உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும், நாம், அலுவலகத்தில் இருந்து பணியாற்றும் நடைமுறையை ஏற்கனவே தொடங்கிவிட்டோம், நிலைமை சீரடைந்ததைத் தொடர்ந்து, நமது மூத்த ஊழியர்களும், குழுத் தலைவர்களும் அலுவலகத்தில் இருந்து பணியாற்றி வருகிறார்கள். தற்போது, நமது மிகப்பெரிய அளவிலான ஊழியர்களும் அலுவலகம் வந்து பணியாற்றும் நேரம் வந்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாரத்தில் மூன்று நாள்கள் அலுவலகம் வரவும், எந்தெந்த நாள்கள் என்பது குறித்து விரைவில் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு எந்தக் காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை.