பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பை இந்தியாவில் ஐந்து ஆண்டுகளுக்குத் தடை செய்து மத்திய அரசு பிறப்பித்திருக்கும் உத்தரவுக்குப் பின்னணியில், அந்த அமைப்பு சர்வதேச பங்கரவாத குழுவான ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிரடி நடவடிக்கை நாடு முழுவதும் பிஎஃப்ஐ அமைப்புடன் தொடர்பிருக்கும் இடங்களில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட இரண்டு சோதனைகளைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு 5 ஆண்டுகள் தடை
பிஎஃப்ஐ அமைப்புக்குத் தடை விதித்து மத்திய உள் விவகாரத் துறை வெளியிட்டிருக்கும் அரசாணையில், இராக் மற்றும் சிரியாவில் இருந்து செயல்படும் பயங்கரவாத குழுவான ஐஎஸ் பயங்கரவாத குழுவில், பிஎஃப்ஐ உறுப்பினர்கள் இணைந்து, சிரியா, ஈராக், ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியுள்ளனர். பல்வேறு மோதல்களில் பிஎஃப்ஐ உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மாநில காவல்துறை மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள் மூலம் கைது செய்யப்பட்டுள்ளனர். இது மட்டுமல்லாமல் பிஎஃப்ஐ உறுப்பினர்கள் வங்கதேச பயங்கரவாத இயக்கமான ஜேஎம்பியுடன் தொடர்பில் இருக்கிறார்கள். அங்கு அது பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும, பிஎஃப்ஐ, பல்வேறு குற்றச்செயல்களிலும், பயங்கரவாத வழக்குகளிலும் தொடர்பு கொண்டதாகவும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு அவமரியாதையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதும், நாட்டுக்கு எதிராக தங்களது கருத்துகளை பரப்ப வெளியிலிருந்து நிதியுதவி பெற்று, உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | இனி வாட்ஸ்ஆப்பிலேயே பிஎன்ஆர், ரயில் ஸ்டேடஸ் அறியும் வசதி!
மேலும், பிஎஃப்ஐ இயக்கம் குறித்து மத்திய அரசு கூறியிருப்பதாவது, கன்னூரைச் சேர்ந்த ஏராளமான பிஎஃப்ஐ ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்துள்ளனர். ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் ஒரு துணை இயக்கமாக பிஎஃப்ஐ செயல்படுகிறதா அல்லது அதன் தலைவர்கள் அந்த இயக்கத்துக்காக செயல்படுகிறார்களா என்பது தெரியவரவில்லை.
இதன் உறுப்பினர்கள் பலரையும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் இணைய வற்புறுத்தியதும், அவர்களில் சிலர் சிரியாவுக்குச் சென்றுவிட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பாலக்காட்டைச் சேர்ந்த பிஎஃப்ஐ பணியாளர் அபு தாஹிர் சிரியாவில் 2017ஆம் ஆண்டு நடந்த ஐஎஸ் சண்டையில் மரணமடைந்தார். இவர் தோஹாவில் கணக்காளர் பணிக்காக 2013ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறினார் என்ற தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் சோதனை
தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சாா்பில் 15 மாநிலங்களில் பிஎஃப்ஐ அலுவலகங்களில் அண்மையில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், நேற்று மாநில காவல் துறை சாா்பில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.
உத்தர பிரதேசம், கா்நாடகம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்குச் சொந்தமான அலுவலகங்களில் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா். இதன் முடிவில் அந்த அமைப்பைச் சோ்ந்த 250-க்கும் அதிகமானோா் கைது செய்யப்பட்டனா்.
இஸ்லாமிய மக்களுக்கு சேவை செய்வதற்காகத் தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன. குறிப்பாக, பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதாகவும், வன்முறைக்குத் துணைபோவதாகவும், மதக் கலவரத்தைத் தூண்டுவதாகவும் புகாா்கள் கூறப்பட்டு வந்தன.
இந்நிலையில், தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் பிஎஃப்ஐ அலுவலகங்கள், நிா்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ, அமலாக்கத் துறை ஆகியவை இணைந்து கடந்த 22-ஆம் தேதி சோதனை நடத்தின. சோதனையின் முடிவில் அந்த அமைப்பைச் சோ்ந்த 106 போ் கைது செய்யப்பட்டனா்.
மீண்டும் சோதனை: இந்நிலையில், உத்தர பிரதேசம், கா்நாடகம், குஜராத், தில்லி, மகாராஷ்டிரம், அஸ்ஸாம், மத்திய பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் அமைந்துள்ள பிஎஃப்ஐ அலுவலகங்களில் அந்தந்த மாநில காவல் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை மீண்டும் சோதனை நடத்தப்பட்டது.
இந்தச் சோதனையின் முடிவில் 250 பேர் கைதாகினர். உத்தர பிரதேசத்தில் 26 மாவட்டங்களில் உள்ளூா் போலீஸாா், பயங்கரவாத தடுப்புப் பிரிவினா் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினா் ஆகியோா் ஒரே நேரத்தில் கூட்டாக இந்தச் சோதனையை நடத்தினா்.