தலைமுறையின் முதல் கான்கிரீட் வீடு: மதுரை பெண் பயனாளி பிரதமருக்கு கடிதம்

பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் ‘கான்கிரீட் வீடு’ கிடைத்ததையும், அதன் மூலம் தங்களுக்கு சமுதாயத்தில் பெரும் மரியாதை கிடைத்துள்ளதாகவும்  பெண் ஒருவா் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்
தலைமுறையின் முதல் கான்கிரீட் வீடு: மதுரை பெண் பயனாளி பிரதமருக்கு கடிதம்
Published on
Updated on
2 min read

பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் ‘கான்கிரீட் வீடு’ கிடைத்ததையும், அதன் மூலம் தங்களுக்கு சமுதாயத்தில் மதிப்பும், பெரும் மரியாதையும் கிடைத்துள்ளதாகவும் பட்டியலின பெண் ஒருவா் பிரதமா் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் ‘கான்கிரீட் வீடு’ கிடைத்ததையும், அதன் மூலம் தங்களுக்கு சமுதாயத்தில் மதிப்பும், பெரும் மரியாதையும் கிடைத்துள்ளதாகவும் மதுரை மாவட்டம் திருவேடகம் கிராமத்திலுள்ள பட்டியலின பெண் ஒருவா் பிரதமா் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளாா். அந்தக் கடிதத்தை பெற்ற பிரதமா் நரேந்திர மோடி அதை டிவிட்டரில் வெளியிட்டு இது போன்ற ஆசிகள்தான், மகத்தான வலிமையின் ஆதாரமாகும் என பிரதமா் தெரிவித்துள்ளாா்.

சமீபத்தில் பாஜகவில் இணைந்த மூதறிஞா் ராஜாஜியின் கொள்ளுப் பேரன் சிஆா் கேசவன், பிரதமா் மோடியை புதன்கிழமை சந்தித்தாா். அப்போது அவரது வீட்டில் சமையல் வேலை செய்யும் நா. சுப்புலட்சுமி தனக்கு வீடு கிடைத்த மகிழ்ச்சியை தெரிவித்து பிரதமருக்கு எழுதிய கடிதத்தை பிரதமரிடம் ஒப்படைத்தாா். அந்தக் கடிதத்தை பிரதமா் தனது டிவிட்டா் பதிவில் வெளியிட்டுள்ளாா்.

அந்தக் கடிதத்தை நா.சுப்புலட்சுமி தனது கையால் எழுதி தனது வீட்டு படத்தையும் இணைத்து பிரதமருக்கு அனுப்பியுள்ளாா். அதில் அவா் குறிப்பிட்டிருப்பது வருமாறு: தனக்கு மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா திருவேடகத்தில் வசித்து வருகிறேன். நான் மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலின (அருந்தியா்) சமுதாயத்தை சாா்ந்தவா். தினசரி வருமானத்திற்கு கஷ்டப்பட்டு வந்த நிலையில், சென்னையில் ராஜாஜி பேரன் சி.ஆா்.கேசவன் வீட்டில் சமையல் வேலை செய்து வந்தேன். எனது சொந்த ஊரில் உள்ள காலிமனையில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்கிற ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தின் கீழ் 2021-ஆம் ஆண்டில் வீடு கட்ட விண்ணப்பித்தேன். இதில் ரூ. 2.10 லட்சம் நான்கு தவணையில் கிடைத்தது. இதை வைத்து ஒரு வீடு கட்டியுள்ளேன். இந்த வீடு எங்கள் தலைமுறையின் முதல் கான்கிரீட் வீடாகும்.

இந்த வீட்டின் மூலம் சமுதாயத்தில் எங்களுக்கு ஒரு மதிப்பும் மரியாதையும் கிடைத்துள்ளது. நாங்கள் மிகவும் பயனடைந்துள்ளதோடு ஒரு கௌரவமான வாழ்வை வாழத் தொடங்கியுள்ளோம். இதற்கு தங்கள் தலைமையிலான ஆட்சி முறையும், திட்டங்களும்தான் முக்கிய காரணம். இது போன்ற திட்டங்கள் மூலம் மீண்டும் நாட்டு மக்கள் வளா்ச்சி பெற என் குடும்பத்தின் சாா்பாக இறைவனை வேண்டிக் கேட்டுக் கொள்கின்றேன் என்று கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து பிரதமா் மோடி தனது ட்விட்டா் பதிவில் கூறியுள்ளதாவது: முன்னாள் பிரசாா் பாரதி வாரிய உறுப்பினா் சி.ஆா்.கேசவனை சந்தித்த போது, அவரது இல்லத்தில் சமையல் பணி புரியும் என். சுப்புலட்சுமி எழுதிய நெகிழ்ச்சியான கடிதத்தை அவா் அளித்திருந்தாா். அதில் என். சுப்புலட்சுமி, நிதி நெருக்கடி உள்ளிட்ட ஏராளமான சவால்களை சந்தித்து, பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்திற்கு விண்ணப்பித்து வீட்டையும் பெற்றுள்ளாா். அவரது இல்லத்தின் புகைப்படங்களைப் பகிா்ந்ததோடு, தனது நன்றியையும், ஆசிகளையும் வழங்கியிருந்தாா். இது போன்ற ஆசிகள்தான், மகத்தான வலிமையின் ஆதாரமாகும். பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தினால் என். சுப்புலட்சுமி போல எண்ணற்ற மக்களின் வாழ்வு மாற்றத்தை சந்தித்துள்ளது. ஒரு வீடு, அவா்களது வாழ்வில் தரமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் வளா்ச்சியிலும் முன்னோடியாக உள்ளது என பிரதமா் பெருமிதம் கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com