
பாஜகத் தலைவர்கள் சிலர் கட்சியிலிருந்து விலகலாம். ஆனால், கட்சித் தொண்டர்கள் பாஜகவுடன் இருப்பதாக கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற மே 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து, அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில், 212 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். வேட்பாளர்கள் அறிவிப்புக்குப் பிறகு அதிருப்தியடைந்த சிலர் பாஜகவிலிருந்து விலகி வருகின்றனர். இந்த நிலையில், பாஜகத் தலைவர்கள் சிலர் கட்சியிலிருந்து விலகலாம். ஆனால், கட்சித் தொண்டர்கள் பாஜகவுடன் இருப்பதாக கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை பேசியதாவது: பாஜகவில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கட்சியிலிருந்து விலகியவர்களை காங்கிரஸ் தனது கட்சியில் சேர்த்து வருகிறது. 60 தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட சரியான வேட்பாளர்கள் இல்லை. அந்த இடங்களில் பாஜகவிலிருந்து விலகி சென்றவர்களை காங்கிரஸ் நிறுத்துகிறது. பொதுவாக, ஆளும் கட்சியில் வேட்பாளர் பதவிக்கு அதிக அளவிலான போட்டி காணப்படுகிறது. நாங்கள் எங்களது தொண்டர்களுடன் பேசி வருகிறோம். சிலர் பதவிக்கு ஆசைப்பட்டு கட்சியிலிருந்து வெளியேற முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், தொண்டர்கள் கட்சியை விட்டு போக மாட்டார்கள். அவர்கள் கட்சிக்காக உழைப்பதில் ஈடுபாட்டுடன் உள்ளனர். எங்களது கட்சி வலிமையாக உள்ளது. மக்கள் எங்களது வெற்றியை உறுதிப்படுத்துவார்கள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.