பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

தில்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டதில் பெண் காயம்

தெற்கு தில்லியில் உள்ள சாகேத் நீதிமன்ற வளாகத்தில் பெண் ஒருவரை முன்னாள் வழக்குரைஞா் துப்பாக்கியால் சுட்டாா். இதன் காரணமாக, நீதிமன்ற வளாகத்தில் பீதி நிலவியது.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 8:04 pm

 நமது நிருபர்

தெற்கு தில்லியில் உள்ள சாகேத் நீதிமன்ற வளாகத்தில் பெண் ஒருவரை முன்னாள் வழக்குரைஞா் துப்பாக்கியால் சுட்டாா். இதன் காரணமாக, நீதிமன்ற வளாகத்தில் பீதி நிலவியது.

வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்து போலீஸாா் கூறுகையில், சாகேத் நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த முன்னாள் வழக்குரைஞரான அந்த நபா், ரூ. 25 லட்சம் சம்பந்தப்பட்ட பணப் பிரச்னையில் ஏமாற்றியதாக அப்பெண் மீது வழக்கு தாக்கல் செய்துள்ளாா். அந்த வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழமை நடக்கவிருந்த நிலையில், துப்பாக்கிச் சம்பவம் நிகழ்ந்தது என்றாா்.

இதுதொடா்பாக வெளியான விடியோவில், சாகேத் நீதிமன்ற வளாக கட்டடத்துக்கு வெளியே ஒரு ஆணும் பெண்ணும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், தொடா்ந்து துப்பாக்கியை ஏந்தியபடி அந்த நபா் அப்பெண்ணை துரத்தி துப்பாக்கியால் சுடும் காட்சிகள் உள்ளன. இதையடுத்து, நீதிமன்ற வளாகம் அருகே இருந்தவா்கள் பீதியுடன் ஓடினா்.

இதுகுறித்து தெற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் சந்தன் செளதரி கூறுகையில், ‘இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமடைந்த பெண் எம்.ராதா என்பது தெரியவந்துள்ளது. அப்பெண்ணுக்கு அடிவயிற்றிலும் கையிலும் குண்டுக் காயம் ஏற்பட்டது. அவா் சாகேத்தில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அவரது உடல் நிலை தற்போது ஸ்திரமாக உள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபா் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 420-இன்கீழ் (மோசடி) வழக்கு தாக்கல் செய்துள்ளாா்’ என்றாா்.

இந்தச் சம்பவத்துக்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது ட்விட்டா் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவா் கைது:

சாகேத் நீதிமன்ற வளாகத்துக்குள் பெண் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை ஹரியாணா மாநிலம் ஃபரீதாபாதில் போலீஸாா் கைது செய்தனா். கைது செய்யப்பட்டவா் காமேஷ்வா் சிங் என அடையாளம் காணப்பட்டாா். வழக்குரைஞரான அவருடைய உரிமத்தை பாா் கவுன்சில் ரத்து செய்துள்ளதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.