தில்லி: மக்களவைக்கு வராமல் புறக்கணித்துள்ள அவைத் தலைவர் ஓம் பிர்லாவை சந்தித்து மீண்டும் வருமாறு எம்பிக்கள் அழைப்பு விடுத்தனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20 தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள், மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க கோரி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கோஷத்துக்கு ஆளுங்கட்சியும் பதில் கோஷம் எழுப்பி வருகின்றனர்.
அவையில் கண்ணியத்துடன் நடந்து கொண்டால் மட்டுமே மீண்டும் அவைக்கு வருவேன் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ள நிலையில், இரண்டாவது நாளாக இன்று அவை நடவடிக்கையில் பங்கேற்காமல் புறக்கணித்தார்.
இந்நிலையில், ஓம் பிர்லாவை நேரில் சந்தித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, காங்கிரஸ் மக்களவை தலைவர் அதீர் ரஞ்சன் செளத்ரி, திமுக எம்பி கனிமொழி, தேசிய மாநாடு கட்சி எம்பி ஃபரூக் அப்துல்லா உள்ளிட்டோர் அவைக்கு மீண்டும் வருமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.