தில்லி: மக்களவையில் எதிர்க்கட்சிகளும், ஆளுங்கட்சியினரும் மாறிமாறி அமளியில் ஈடுபடுவதால் 2-வது நாளாக அவைக்கு வராமல் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா புறக்கணித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20 தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள், மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க கோரி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கோஷத்துக்கு ஆளுங்கட்சியும் பதில் கோஷம் எழுப்பி வருகின்றனர்.
அவையில் கண்ணியத்துடன் நடந்து கொண்டால் மட்டுமே மீண்டும் அவைக்கு வருவேன் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ள நிலையில், இரண்டாவது நாளாக இன்று அவை நடவடிக்கையில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார்.
இந்நிலையில், இன்றைய கூட்டம் தொடங்கியவுடன் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மீண்டும் அவைக்கு வந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் மக்களவைத் தலைவர் அதீர் ரஞ்சன் செளத்ரி கோரிக்கை வைத்தார்.
தொடர்ந்து, மக்களவையில் பிரதமரை விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் 11-வது நாளாக பகல் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.