பருவமழை தொடர்பான தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிக அளவிலான நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவதாக தில்லி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் சுகாதாரத்தைப் பேண வேண்டும் எனவும், மருந்து, மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையின்றி சாப்பிட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தில்லி மருத்துவர்கள் தரப்பில் கூறியதாவது: இந்த ஆண்டு பருவமழையின் காரணத்தினால் தில்லியின் பல்வேறு பகுதிகளும் வெள்ளக்காடாக மாறியது. இதன்மூலம் தலைநகர் தில்லியில் சுகாதாரப் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது. இந்த சுகாதாரப் பிரச்னைகளால் பலரும் தொற்றுநோய்க்கு ஆளாகி வருகின்றனர். மற்ற ஆண்டுகளைப் போல் அல்லாமல் இந்த ஆண்டு பருவமழை தில்லியில் எதிர்பாராத அளவுக்கு வெள்ளத்தை ஏற்படுத்தியது. நீரினால் பரவும் நோய்கள் தில்லியில் அதிகரித்துள்ளது. டைபாய்டு மற்றும் டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவத் தொடங்கியுள்ளது. மக்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி தாங்களாகவே மருந்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. நீங்களாகவே மருந்துகளை எடுத்துக் கொள்வது ஆபத்தாக முடியலாம். மக்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். சுகாதரமான பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும். கண், காது, மூக்கு போன்றவற்றை அடிக்கடி கைகளால் தொடுவதை தவிர்க்க வேண்டும். சூடான நீரையேப் பருக வேண்டும். நன்கு வேகவைத்த உணவுகளையே சாப்பிட வேண்டும் என்றனர்.