புது தில்லி: தில்லியில் இருந்து அல்மாட்டி கடத்திச்செல்ல முயன்ற ரூ.75 லட்சம் மதிப்புள்ள மருந்துகளை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.
தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சனிக்கிழமை அல்மாட்டிக்கு செல்லும் ஏர் அஸ்தானா விமானம் புறப்படத் தயாரானது. அதில் செல்லவிருந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, எக்திவோர் அப்துல்லேவா (உஸ்பெகிஸ்தான்) என்ற வெளிநாட்டு பெண் பயணியிடம் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையில், அவரிடம் இருந்து சுமார் ரூ.75 லட்சம் மதிப்புள்ள மருந்துகளை மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) பறிமுதல் செய்துள்ளதாகவும், மேலும், மருந்துகளை எடுத்துச் செல்வதற்கான உரிய ரசீதுகள் எதுவும் அவரிடம் இல்லை என்று ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பின்னர், அந்த பெண் பயணியிடம் பறிமுதல் செய்யப்பட்ட மருந்துகள் மற்றும் அவரது உடமைகள் அனைத்தும் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவரிடம் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.