உச்சநீதிமன்றம் குஜராத் நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைத்த பிறகும் ராகுல் காந்திக்கு எம்.பி. பதவியை வழங்க மத்திய அரசு அஞ்சுவதாக சிவசேனை தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது மோடி சமூகத்தினரை அவமதிக்கும் விதமாக பேசியதாக ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. அதன்பின், ராகுல் அவரது மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்தும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். சூரத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். ஆனால், அவரது மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து, உச்சநீதிமன்றத்தில் ராகுல் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் குஜராத் நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இந்த நிலையில், காங்கிரஸ் உள்பட பலரும் ராகுலுக்கு உடனடியாக எம்.பி. பதவி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க:அம்ரித் பாரத் நிலையத் திட்டம்: பிரதமர் அடிக்கல் நாட்டினார்
இந்த நிலையில், உச்சநீதிமன்றம் குஜராத் நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைத்த பிறகும் ராகுல் காந்திக்கு எம்.பி. பதவியை வழங்க மத்திய அரசு அஞ்சுவதாக சிவசேனை தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ராகுல் காந்தியை மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்தபோது காட்டிய வேகத்தை உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னர் காண முடியவில்லை. உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 3 நாள்கள் ஆகின்றன. ஆனால், மக்களவைத் தலைவர் இன்னும் ராகுலுக்கு எம்.பி. பதவியை மீண்டும் வழங்கவில்லை. மத்திய அரசு ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது. அதன் காரணத்தினால் தான் அவருக்கு எம்.பி. பதவியை திரும்ப வழங்குவதில் காலத் தாமதம் செய்கிறது என்றார்.