ஹிமாசலில் மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 29 அக உயர்ந்துள்ளது. மேலும் சிம்லாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலியாகினர்.
இந்தியாவில் பல்வேறு இடங்களிலும் பருவமழை காரணமாகக் கனமழை பெய்து வருகின்றது. தமிழகத்தில் பெரியளவில் மழை இல்லை என்றாலும், வடமாநிலங்களில் பெய்துவரும் கனமழை பல்வேறு பாதிப்புகளையும், சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக ஹிமாச்சல் மாநிலத்தில் மேக வெடிப்பு காரணமாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. சோலன் மாவட்டம் ஜாடோன் கிராமத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு பலி எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. சிம்லாவில் சிவன் கோயிலில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலியாகியுள்ளனர்.
பலியானோருக்கு அந்த மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டார். மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
கனமழை காரணமாக கல்கா-சிம்லா, சண்டிகர்-மணாலி உள்ளிட்ட முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. அங்கு மேலும் கனமழை தொடர வாய்ப்புள்ளதாகவும், நாளை வரை மொத்தம் 9 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.