வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிட்டால் பிரியங்கா காந்தி நிச்சயம் வெற்றி பெறுவார்: சஞ்சய் ரௌத்

வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி போட்டியிட்டால் நிச்சயம்  வெற்றி பெறுவார் என்று சிவசேனை (உத்தவ் தாக்கரே பிரிவு) தலைவர் சஞ்சய் ரௌத்
கோப்புப்படம்
கோப்புப்படம்

மும்பை (மகாராஷ்டிரம்): வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி போட்டியிட்டால் நிச்சயம்  வெற்றி பெறுவார் என்று சிவசேனை (உத்தவ் தாக்கரே பிரிவு) தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்தார்.

‘மக்களவையில் பிரியங்கா நிச்சயம் இடம்பெற வேண்டும். அதற்கான அனைத்து தகுதிகளும் அவருக்கு உள்ளன. நாடாளுமன்றத்தில் அவா் மிகச் சிறப்பாக செயல்படுவாா். காங்கிரஸ் கட்சி அவருக்காக சிறப்பாக திட்டமிடுமென நம்புகிறேன்’ என்று பிரியங்காவின் கணவா் ராபா்ட் வதேரா ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று சிவசேனை (உத்தவ் தாக்கரே பிரிவு) தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "வரும் 2024 மக்களவைத் தேர்தலில் வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியிட்டால் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார். வாரணாசி மக்கள் பிரியங்கா காந்தியை விரும்புகிறார்கள். ரேபரேலி, வாரணாசி மற்றும் அமேதி ஆகிய தொகுதிகளுக்கான போட்டி பாஜகவுக்கு கடினமானது" என்று சஞ்சய் ரௌத் கூறினார்.

மேலும் மக்கள் ராகுல் காந்தியுடன் நிற்க வேண்டும்.  வாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியிட்டால் அவர்(பிரியங்கா காந்தி) நிச்சயம் வெற்றி பெறுவார் என்பது எனது கருத்து என ரௌத் தெரிவித்தார். 

மேலும் சரத் பவார் மற்றும் அஜித் பவார் குறித்து பேசிய அவர், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும், பிரதமர் நரேந்திர மோடியும் சந்திக்க முடியும் என்றால், சரத் பவார் மற்றும் அஜித் பவாரை ஏன் சந்திக்கக்கூடாது?

சரத் பவார் மற்றும் அஜித் பவார் சந்திப்பு பற்றிய ஊகங்கள் குறித்து பேசிய சிவசேனா தலைவர், “நவாஸ் ஷெரீப்பும் பிரதமர் நரேந்திர மோடியும் சந்திக்க முடியும் என்றால், ஏன் சரத் பவாரும் அஜித் பவாரும் சந்திக்கக்கூடாது? ஞாயிற்றுக்கிழமை சரத் பவாரும் அஜித் பவாரும் சந்தித்துப் பேசினர் என்றும், அது குறித்து சரத் பவார் விரைவில் பேசுவார் என்றும் ஊடகங்கள் மூலம் அறிகிறோம். அதே நேரத்தில், அஜீத் பவாரை இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் பங்கேற்க அழைத்து வரும் நோக்கில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக நான் நினைக்கிறேன்.

மகாராஷ்டிராவின் இரண்டு துணை முதல்வர்களும் கூட இந்த தற்போதைய அரசாங்கத்தில் மகிழ்ச்சியடையவில்லை என்றும் ராவத் கூறினார்.

“அரசியலில் எதுவும் நடக்கலாம். அஜித் பவார், தேவேந்திர ஃபட்னவீஸ் மற்றும் மகாராஷ்டிர மக்களும் தற்போதைய அரசாங்கத்தால் மகிழ்ச்சியடையவில்லை" என்று அவர் மேலும் கூறினார்.

சனிக்கிழமை, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரிடம் அஜித் பவாருடனான ‘ரகசிய சந்திப்பு’ குறித்து கேட்கப்பட்டதற்கு, ஒருவரின் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பு எப்படி ரகசியமாகும் என்று கூறினார்.

“என் மருமகனை சந்திப்பதில் என்ன தவறு? ஒருவரது இல்லத்தில் நடந்தபோது அது எப்படி ரகசியமாக முடியும். நான் அவரது வீட்டில் இருந்தேன், ”என்று அவர் மேலும் கூறினார்.

புணேயில் ஒரு தொழிலதிபா் வீட்டில் சனிக்கிழமை நள்ளிரவு தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாரும், மகாராஷ்டிர துணை முதல்வா் அஜீத் பவாரும் ரகசியமாக சந்தித்து ஆலோசனை நடத்தினர்.  சந்திப்புக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் சரத் பவாா் அந்த வீட்டில் இருந்து வெளியேறினாா். அதைத் தொடா்ந்து, 6.45 மணியளவில் அஜீத் பவாா் வெளியேறினாா்.  

கட்சி உடைந்த பிறகு இருவருக்கும் இடையே நடைபெற்ற சந்திப்புகள் வெளிப்படையாக இருந்த நிலையில், இப்போது ரகசிய சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இதனால், அவா்கள் இருவரில் யாராவது ஒருவா் அணி மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com