சுதந்திர தின நாளில் ராஜஸ்தான் மாநிலத்தில் அன்னபூர்ணா மளிகைப் பொருள் தொகுப்பு வழங்கும் திட்டட்தை அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தொடங்கி வைத்தார்.
இந்த மளிகைப் பொருள் தொகுப்பில் துவரம் பருப்பு, சர்க்கரை, உப்பு, சமையல் எண்ணெய், மிளகாய்த் தூள், மல்லித் தூள் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த மளிகைப் பொருள் தொகுப்பு ஒன்றுக்கு ரூ.370 அரசுக்கு செலவாகிறது. இதன்மூலம், அரசுக்கு மாதத்துக்கு ரூ.392 கோடி செலவாகும். இந்தத் திட்டம் முதல்வரின் விலைவாசியைக் கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்படுகிறது.
இதையும் படிக்க: இந்திய குடியுரிமை பெற்றார் நடிகர் அக்ஷய் குமார்!
இத்திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் அசோக் கெலாட் பேசியதாவது: அன்னபூர்ணா மளிகைப் பொருள் தொகுப்பு இலவசப் பொருள்கள் இல்லை. இந்தத் திட்டம் மாநிலத்தின் நிதி மேலாண்மை சிறப்பாக நடைபெற்றதால் செயல்படுத்தப்படுகிறது. என்னுடைய அறிவிப்புகள் வெறும் அறிவிப்புகள் மட்டும் இல்லை. நான் கூறியதை செய்திருக்கிறேன் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் பிரதாப் சிங் மற்றும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் ஆகியோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.