உலகக் கோப்பை செஸ் போட்டியில் இரண்டாமிடம் பெற்ற பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எலக்ட்ரிக் காரை பரிசாக அளிக்கிறார் ஆனந்த் மஹிந்திரா.
அஜா்பைஜானில் நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியரும், தமிழருமான ஆா். பிரக்ஞானந்தா 2-ஆம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் பெற்றாா். உலகின் நம்பா் 1 வீரரான நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் சாம்பியன் கோப்பை வென்றாா்.
உலகக் கோப்பை செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு இறுதிச்சுற்று வரை வந்த முதல் இந்தியா், இந்தப் போட்டியின் வரலாற்றில் இறுதிச்சுற்றுக்கு வந்த இளம் போட்டியாளா் (18) என்ற பெருமைகளை பிரக்ஞானந்தா பெற்றுள்ளாா்.
இதையடுத்து பிரக்ஞானந்தாவுக்கு, குடியரசுத்தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி, மாநில முதல்வர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு ஒரு மின்சார காரை பரிசளிப்பதாக அறிவித்துள்ளார்.
முன்னதாக, பிரக்ஞானந்தாவுக்கு 'தார்' காரை பரிசளிக்க வேண்டும் என்று ட்விட்டரில் பலரும் ஆனந்த் மஹிந்திராவுக்கு பரிந்துரை செய்திருந்தனர்.
இதற்குப் பதில் அளித்துள்ள ஆனந்த் மஹிந்திரா, 'ஆனால் எனக்கு இன்னொரு யோசனை இருக்கிறது.
தங்கள் குழந்தைகளை செஸ் விளையாட்டில் அறிமுகப்படுத்தி இந்த அளவுக்கு ஊக்குவித்து அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வரும் பெற்றோரை ஊக்குவிக்க விரும்புகிறேன். மின் வாகனங்களைப் போலவே அவர்களின் பிள்ளைகளும் நம் எதிர்காலத்திற்கான சிறந்த முதலீடு. எனவே பிரக்ஞானந்தாவின் பெற்றோர் நாகலட்சுமி - ரமேஷ்பாபுவிற்கு எக்ஸ்யுவி 400 (XUV4OO) என்ற மின் வாகனத்தை பரிசளிக்கலாம் என்று நினைக்கிறேன்' என்று ட்விட்டரில் குறிப்பிட்டு 'என்ன சொல்கிறீர்கள்?' என தனது நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராஜேஷை டேக் செய்துள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள ராஜேஷ், 'யோசனை வழங்கியமைக்கு ஆனந்த் மஹிந்திராவுக்கு நன்றி. எங்களது நிறுவனத்தின் மின் வாகனங்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளது. விரைவில் ஒரு படைப்பின் மூலமாக எங்கள் குழு அவர்களை அணுகும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனந்த மஹிந்திராவின் பரிசுக்கு பலரும் வாழ்த்தும் நன்றியும் தெரிவித்து வருகின்றனர்.