ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநில மக்களும் பாஜகவை ஆதரித்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார்.
ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலங்கானா மற்றும் மிஸோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னோட்டமாக இந்த ஐந்து மாநிலத் தேர்தல்கள் பார்க்கப்படுகின்றன.
இவற்றில் மிஸோரம் மாநிலத்திற்கு மட்டும் வாக்கு எண்ணிக்கை நாளை (டிச.4) நடைபெறுகிறது. மற்ற நான்கு மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (டிச. 3) காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க | ராஜஸ்தானில் கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்தது பாஜக
இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் பாஜக முன்னிலையில் உள்ளது. தெலங்கானாவில் மட்டுமே காங்கிரஸ் கட்சி முன்னிலையில் நீடித்து வருகிறது.
90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் 55 தொகுதிகளிலும், 230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் 161 இடங்களிலும், ராஜஸ்தானில் 112 தொகுதிகளிலும் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
இதனைக் குறிப்பிட்டு பேசிய மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “மூன்று மாநிலங்களிலும் மக்கள் மோடியின் தலைமையிலான பாஜகவை ஆதரித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் போலி வாக்குறுதிகளை புறந்தள்ளி, மோடியின் தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இதையும் படிக்க | தெலங்கானா: காங்கிரஸ் -64, பிஆர்எஸ் - 43 இடங்களில் முன்னிலை
மூன்று மாநில தேர்தல் முடிவுகளும் பிரதமர் மோடியின் தலைமையை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளதை தெளிவாகக் காட்டுகிறது. தெலங்கானா மாநிலத்தில் பிஆர்எஸ் கட்சி ஆட்சியின் முறைகேடுகளால் காங்கிரஸ் பலனடைந்துள்ளது. விரைவில் தெலங்கானாவிலும் பாஜக வளர்ச்சி அடையும்.” என்று தெரிவித்துள்ளார்.