தெலங்கானாவில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்து வரும் நிலையில், கட்சியின் மாநிலத் தலைவர் ரேவந்த் ரெட்டி பேரணியில் ஈடுபட்டுள்ளார்.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை (டிச. 3) தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆரம்பம் முதலே முன்னிலை வகித்து வருகிறது. பிற்பகல் 1.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் -65, பிஆர்எஸ் - 40, பாஜக - 9, பிற - 5 இடங்களில் முன்னிலையில் உள்ளன.
இதையும் படிக்க | தெலங்கானா: காங்கிரஸ் -64, பிஆர்எஸ் - 43 இடங்களில் முன்னிலை
தெலங்கானாவில் சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்டிர சமிதி ஆட்சியில் இருந்து வரும் நிலையில் தற்போது காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும் நிலையில் உள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான 60 இடங்களுக்கும் மேல் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் தெலங்கானாவில் காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் தெலங்கானா காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரேவந்த் ரெட்டி, ஹைதராபாத்தில் சாலைப் பேரணியில் ஈடுபட்டுள்ளார். காரில் நின்றபடி அவர் மக்களிடம் நன்றி தெரிவித்து வருகிறார்.
ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து காங்கிரஸ் அலுவலகத்துக்கு பேரணியாக செல்கிறார்.
முன்னதாக, தெலங்கானா டிஜிபி அஞ்சனி குமார், ரேவந்த் ரெட்டியை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
தெலங்கானா காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரேவந்த் ரெட்டி, தான் போட்டியிட்ட கோடங்கல், காமாரெட்டி ஆகிய இரு தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறார்.
இதையும் படிக்க | தெலங்கானாவில் கடும் பின்னடைவில் முதல்வர், அமைச்சர்கள்!