தெலங்கானாவில் கோடங்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரேவந்த் ரெட்டி வெற்றி பெற்றுள்ளார்.
மேலும் அவர் போட்டியிட்ட மற்றொரு தொகுதியான காமாரெட்டியில் முதல்வர் சந்திரசேகர் ராவை வீழ்த்தி முன்னிலையில் இருந்து வருகிறார்.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை (டிச. 3) தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆரம்பம் முதலே முன்னிலை வகித்து வருகிறது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி காங்கிரஸ் -65, பிஆர்எஸ் - 40, பாஜக - 9, பிற - 5 இடங்களில் முன்னிலையில் உள்ளன.
தெலங்கானாவில் சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்டிர சமிதி ஆட்சியில் இருந்து வரும் நிலையில் தற்போது காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும் நிலையில் உள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான 60 இடங்களுக்கும் மேல் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் தெலங்கானாவில் காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தெலங்கானா காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரேவந்த் ரெட்டி காமாரெட்டி, கோடங்கல் என இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.
இதில் கோடங்கல் தொகுதியில் வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காமாரெட்டி தொகுதியில் ரேவந்த் ரெட்டியும், பாஜக வேட்பாளர் வெங்கட ரமண ரெட்டியும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் இருக்கின்றனர்.
பிற்பகல் 3 மணி நிலவரப்படி, தேர்தல் ஆணையம் தகவலின்படி, ரேவந்த் ரெட்டி 38,452, வெங்கட ரமண ரெட்டி 38,159 வாக்குகள் பெற்றுள்ளனர். முதல்வர் சந்திரசேகர் ராவ் 36,653 வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தில் உள்ளார்.
ரேவந்த் ரெட்டி, மல்காஜ்கிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | தெலங்கானாவில் கடும் பின்னடைவில் முதல்வர், அமைச்சர்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.