தெலங்கானாவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஆளும் பாரத ராஷ்டிர சமிதி அமைச்சர்கள் பலரும் பின்னடைவில் உள்ளனர்.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை (டிச. 3) தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதன்படி, தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆரம்பம் முதலே முன்னிலை வகித்து வருகிறது. பிற்பகல் 12.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் -65, பிஆர்எஸ் - 42, பாஜக - 9, பிற - 3 இடங்களில் முன்னிலையில் உள்ளன.
இதையும் படிக்க | தெலங்கானா: காங்கிரஸ் -64, பிஆர்எஸ் - 43 இடங்களில் முன்னிலை
தெலங்கானாவில் சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்டிர சமிதி ஆட்சியில் இருந்து வரும் நிலையில் தற்போது காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும் நிலையில் உள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான 60 இடங்களுக்கும் மேல் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் தெலங்கானாவில் காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தெலங்கானா முதல்வரும் பாரத ராஷ்டிர சமிதி தலைவருமான கே. சந்திரசேகர் ராவ் போட்டியிட்ட காமாரெட்டி தொகுதியில் பின்னடைவைச் சந்தித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும் மாநில தலைவருமான ரேவந்த் ரெட்டி முன்னிலையில் உள்ளார்.
அதேபோல, பிஆர்எஸ் கட்சி அமைச்சர்கள் இந்திரகரன் ரெட்டி, கொப்புலா ஈஸ்வர், வெமுலா பிரசாந்த் ரெட்டி, தயாகர் ராவ், நிரஞ்சன் ரெட்டி, சபிதா இந்திரா ரெட்டி, தயாகர் ரெட்டி, புவ்வுடா அஜய் குமார் உள்ளிட்ட பலரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.
தெலங்கானாவில் 119 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த நவ. 30 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.