ஹைதராபாத்: கடந்த 2022ஆம் ஆண்டு தெலங்கானா மாநிலத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கையை விட 3 மடங்கு அதிகமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
தேசிய குற்றப் பதிவு காப்பகம் வெளியிட்டிருக்கும் தகவலில், 2022ஆம் ஆண்டு 543 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருப்பதாகவும், இதே காலத்தில் பதிவான விவசாயிகளின் தற்கொலை 178 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2022ஆம் ஆண்டில், ஒவ்வொரு மாதமும் 45 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக சராசரி காட்டுகிறது.
இதையும் படிக்க.. மிக்ஜம் வெள்ள நிவாரணம் ரூ.6 ஆயிரம்: ஸ்டாலின் அறிவிப்பு
கடந்த 2019ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை 499 ஆக இருந்தது. அதேவேளையில் கடந்த 2019 - 2022ஆம் ஆண்டு வரை தெலங்கானாவில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 2,025 ஆக உள்ளது.
மாணவர்களுக்கு அடுத்தபடியாக படித்த இளம் பட்டதாரிகள் 497 பேர் தற்கொலை செய்துகொண்டதாக புள்ளிவிவரம் காட்டுகிறது. வெளியிலிருந்து வரும் அழுத்தமே மாணவர்களின் தற்கொலைக்குக் காரணமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
முதலில் கல்வி, பிறகு காதல் மற்றும் வேலை போன்றவை தற்கொலைக்கான காரணங்களின் பட்டியலில் வரிசைகட்டி நிற்கின்றன.
இதையும் படிக்க.. பெண் மருத்துவர் தற்கொலைக் கடிதத்தில் பெயரைக் குறிப்பிடவில்லையா?
தெலங்கானா மாநிலத்தில் 2022ஆம் ஆண்டு ஒட்டுமொத்தமாக 9,980 தற்கொலைகள் நடந்துள்ளன. ஆந்திர மாநிலத்திலும் மாணவர்களின் தற்கொலை விகிதம் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. அங்கு 2022ஆம் ஆண்டு 575 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தேசிய அளவில் மாணவர்களின் தற்கொலையில் ஆந்திரம் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.