'இந்தியா' கூட்டணியின் நான்காவது கூட்டம்: ஜெய்ராம் ரமேஷ் அறிவிப்பு

‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் நான்காவது கூட்டம் எங்கு எப்போது நடைபெறும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார்.
'இந்தியா' கூட்டணியின் நான்காவது கூட்டம்: ஜெய்ராம் ரமேஷ் அறிவிப்பு

'இந்தியா' கூட்டணி கட்சிகளின் நான்காவது கூட்டம் புதுதில்லியில் நடைபெறும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, “இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் நான்காவது கூட்டம் புதுதில்லியில் டிசம்பர் 19-ஆம் தேதி மாலை 3 மணிக்கு நடைபெறும். இந்தியா ஒற்றுமையாக இருக்கும். இந்தியா வெல்லும்.” என்று தெரிவித்துள்ளார்.

தெலங்கானா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மத்தியப் பிரதேச தலைநகா் போபாலில் இந்தியா கூட்டணியின் நான்காவது கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் கூட்டணி கட்சிகளின் முக்கியத் தலைவர்களான மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், நிதிஷ் குமார், அகிலேஷ் யாதவ் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்க முடியாத சூழல் நிலவியதால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகளின் நான்காவது கூட்டம் நடைபெறும் விவரங்களை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

2024 மக்களவைத் தோ்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன. காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி உள்ளிட்ட பிரதான எதிா்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் ‘இந்தியா’ கூட்டணியின் முதல் மூன்று ஆலோசனைக் கூட்டங்கள் முறையே பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களில் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com