சத்தீஸ்கரில், புதுமண இணையர்கள் உள்பட 5 பேர் கார் விபத்தில் பலியாகியுள்ளனர்.
இது குறித்து முல்மலா பகுதி காவலர்கள் தெரிவித்தாவது:
பலோடா கிராமத்தைச் சேர்ந்த சுபம் சோனிக்கு ஷிவ்ரிநாரயண் பகுதியை சேர்ந்த பெண்ணுடன் சனிக்கிழமை இரவு திருமணம் நடந்துள்ளது.
திருமணம் முடித்த கையோடு புதுமண இணையர்கள் இருவரும் அவர்களது குடும்பத்தினர் மூவர் உள்பட காரில் பயணித்தபோது அதிகாலை நேரத்தில் எதிரில் வந்த டிரக்குடன் நேருக்கு நேராக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திலேயே மணமகள் உள்பட நான்கு பேரும் உயிரிழந்துள்ளனர்.
மணமகன் காயங்களோடு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
மணமகனின் தந்தை ஓம்பிரகாஷ் சோனி காரை ஓட்டி வந்துள்ளார். காவலர்களுக்குத் தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள் இறந்தவர்களின் உடல்களை உடற்கூராய்வுக்கு அனுப்பியுள்ளனர்.
இதையும் படிக்க: இந்தியாவில் போதைப்பொருள் கடத்தும் நைஜீரியப் பெண்!
டிரக் ஓட்டிவந்த ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவலர்கள் தேடி வருகின்றனர்.