கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானின் வாகனங்களை கடந்த திங்கள் கிழமை இந்திய மாணவர் கூட்டமைப்பினர் (SFI) தடுத்து நடத்திய போராட்டத்திற்கு காவல்துறையினர் உடந்தையாக இருந்துள்ளனர் என ஆளுநர் குற்றம் சாட்டியுள்ளார். அந்த இடத்திற்கு போராட்டக்காரர்கள் காவல்துறை வாகனங்களில் வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய ஆளுநர் ஆரிப், இந்தத் தாக்குதலுக்குப் பின் கேரள முதல்வர் பினராயி விஜயன் இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மூன்று நாள்களுக்கு முன் முதல்வர் பேசிய கருத்துக்களால் எஸ்எப்ஐ அமைப்பினர் தூண்டிவிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: காங்கிரஸ் இருக்கும்போது எதற்கு மனி ஹெய்ஸ்ட்?: மோடி
'கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் இருப்பதால் கேரளா கம்யூனிஸ மாநிலமாக மாறிவிடாது. கம்யூனிஸ்ட்டுகள் ஆள்வதால் கேரளா சர்வாதிகார மாநிலமாக மாறிவிடாது' எனக் கூறியுள்ளார் ஆளுநர் ஆரிப் முகமது.
மேலும், மத்திய அமைச்சர் வி.முரளிதரன், “ஆளுநரின் பயணத்திட்டங்கள் குறித்த தகவல்களைக் காவல்துறையினர்தான் எஸ்எப்ஐ அமைப்பினருக்குத் தெரிவித்திருக்க வேண்டும்” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, ஆளுநரின் வாகனங்களை நிறுத்தாமல் கருப்புக்கொடி போராட்டம் தொடரும் என மாணவர் சங்கத்தின் தலைமை தெரிவித்துள்ளது. கல்வி வளாகங்களை காவி மயமாக்க முயலும் கேரள ஆளுநரின் முயற்சிகளை எதிர்த்து போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.