தெலங்கானா மாநிலத்தில் போதைப் பொருட்கள் விற்பனைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. அதற்கான முடிவுகள் டிசம்பர் 3-ஆம் தேதி வெளியிடப்பட்டன. அதில் காங்கிரஸ் கட்சி 64 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
அதையடுத்து தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவரான ரேவந்த் ரெட்டி முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தெலங்கானா செயலகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முதல்வர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கலால் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் கிருஷ்ண ராவ், தலைமைச் செயலாளர் சாந்தி குமாரி, டிஜிபி ரவி குப்தா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய ரேவந்த் ரெட்டி போதைப்பொருள் நுகர்வு மற்றும் விற்பனைக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். விரைவில் தெலங்கானா மாநில போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு முழுநேர இயக்குநரை நியமிக்க உள்ளதாக உறுதியளித்தார்.
இதையும் படிக்க | வெள்ள பாதிப்பை தமிழக அரசு மிகச் சிறப்பாக கையாண்டது: மத்திய குழு
நாட்டிலேயே போதைப்பொருள் இல்லாத மாநிலமாக தெலங்கானாவை உயர்த்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அதற்கு போதைப்பொருள் விற்பனையை தடுப்பதற்கு கூடுதல் முன்னுரிமை அளித்து அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என்று தெலங்கானா முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.