தில்லி: மக்களவையில் அத்துமீறி நுழைந்தவர்களில் ஒருவர் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா பரிந்துரையில் வந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் அலுவல்கள் இன்று வழக்கம்போல் நடைபெற்று கொண்டிருந்த நிலையில், மக்களவையின் பார்வையாளர்கள் மடத்தில் அமர்ந்திருந்த இருவர் திடீரென்று பகல் 1.12 மணியளவில் அவைக்குள் குதித்தனர்.
‘சர்வாதிகாரம் ஒழிக’ என்ற முழக்கங்களை எழுப்பியபடி, அவைக்குள் தாவிக் குதித்து தப்பியோட முயன்றவர்களை எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தியதாகவும், அப்போது அவர்கள் கையில் வைத்திருந்த மஞ்சள் நிறப் புகைக் குண்டுகளை வீசியதாகவும் கூறப்படுகிறது.
இவர்களை மடக்கிப் பிடித்த எம்பிக்கள் காவலர்களிடம் ஒப்படைத்தனர். இருவரையும் கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், நாடாளுமன்றத்துக்கு வெளியே புகைக் குண்டுகளை வீசிய ஒரு பெண் உள்பட இருவரையும் காவல்துறையினர் கைதுச் செய்தனர்.
நாடாளுமன்றத்தில் மக்களவைக்குள் பார்வையாளராக பங்கேற்பதற்கு எம்பியின் பரிந்துரை கடிதம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த கடிதத்தின் அடிப்படையிலேயே நுழைவுச் சீட்டு வழங்கப்படும்.
இந்த நிலையில், அத்துமீறலில் ஈடுபட்ட இருவருக்கும் பரிந்துரை கடிதம் அளித்த மக்களவை உறுப்பினர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில், மைசூரு மக்களவையின் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சஹார் சர்மா என்பவருக்கு பிரதாப் சிம்ஹா அலுவலகத்தில் இருந்து பரிந்துரை கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஒருவருக்கு பரிந்துரை கடிதம் வழங்கிய மக்களவை உறுப்பினர் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.