
நாடாளுமன்ற பாதுகாப்பில் மத்திய அரசு மெத்தனமாக செயல்படுவது ஏன் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் மர்ம நபர்கள் இருவர் மக்களவையில் புகுந்து புகைக்குண்டுகளை வீசிய சம்பவம் தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் ஆதிர்ரஞ்சன் செளத்ரி பேசியதாவது, மக்களவைத் தலைவர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இதைத் தவிர்த்து இன்னும் பல பிரச்னைகள் தொடர்பாகவும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியது. இன்று அவையில் நடந்த சம்பவம் தொடர்பாக கேள்விகளை முன்வைத்தோம். டிசம்பர் 13ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தப்படலாம் என்பது தொடர்பாக பலமுறை குரல் எழுப்பினோம். ஆனால், மத்திய அரசு அதில் அக்கறை காட்டவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
நாடாளுமன்றத்தின் பாதுகாப்பில் மெத்தனமாக செயல்படுவது ஏன்? இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என அவைத்தலைவரிடம் நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம் எனக் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் அலுவல்கள் இன்று வழக்கம்போல் நடைபெற்று கொண்டிருந்தபோது, மக்களவையின் பார்வையாளர்கள் மடத்தில் அமர்ந்திருந்த இருவர் திடீரென்று பிற்பகல் 1.12 மணியளவில் அவைக்குள் குதித்தனர்.
‘சர்வாதிகாரம் ஒழிக’ என்ற முழக்கங்களை எழுப்பியபடி, கையில் வைத்திருந்த மஞ்சள் நிறப் புகைக் குண்டுகளை அவையில் வீசினர். அவர்களை மடக்கிப் பிடித்த எம்.பி.க்கள் அவைக் காவலர்களிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.