6 பேரை ஒருங்கிணைத்த முகநூல் பக்கம்; முன்கூட்டியே ஒத்திகை!

மக்களவையில் சதிதிட்டத்தை அரங்கேற்றிய 6 பேரும் தொடர்புடைய முகநூல் குழு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
6 பேரை ஒருங்கிணைத்த முகநூல் பக்கம்; முன்கூட்டியே ஒத்திகை!
Published on
Updated on
1 min read

மக்களவையில் சதிதிட்டத்தை அரங்கேற்றிய 6 பேரும் தொடர்புடைய முகநூல் குழு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவையில் புதன்கிழமை பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த இரண்டு இளைஞர்கள் எம்.பி.க்கள் அமரும் பகுதிக்குள் குதித்து புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினர். நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் இதேபோன்று புகைக் குப்பிகளை வீசி பெண் உள்பட இருவர் தாக்குதல் நடத்தினர்.

இவர்கள் 4 பேரையும் பாதுகாப்புப் படையினர் கைது செய்து தில்லி போலீஸிடம் ஒப்படைந்தனர். நாடாளுமன்றச் சாலை காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நாடாளுமன்றம் மீதான பயங்கரவாதத் தாக்குதலின் 22-ஆம் ஆண்டு நினைவு தினத்தில் நடந்த இந்தத் தாக்குதல் திட்டத்தை 6 நண்பர்கள் இணைந்து செயல்படுத்தியது போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உத்தர பிரதேசத்தின் லக்னெளவைச் சேர்ந்த சாகர் சர்மா, கர்நாடகத்தின் மைசூரைச் சேர்ந்த டி.மனோரஞ்சன், ஹரியாணாவைச் சேர்ந்த நீலம் தேவி, மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த அமோல் ஷிண்டே, குருகிராம் நகரில் வசித்து வரும் விஷால், லலித் ஆகிய 6 பேரும் முகநூல் மூலம் நண்பர்களாகி இந்த சதிதிட்டத்தை செய்துள்ளனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் வெளியிட்ட தகவல்: 

“இவர்கள் அனைவரும் “பகத்சிங் ஃபேன் கிளப்” என்ற முகநூல் பக்கம் மூலம் நண்பர்களாகியுள்ளனர். ஒற்றைக் கருத்துடைய 6 பேரும் ஒன்றரை ஆண்டுக்கு முன்னதாக மைசூரில் சந்தித்துப் பேசியுள்ளனர்.

தொடர்ந்து நெருங்கிய நண்பர்களான 6 பேரும் டிசம்பர் 10-ஆம் தேதி தனித்தனியாக தில்லி வந்தடைந்துள்ளனர். இந்தியா கேட் அருகே சந்தித்துப் பேசியுள்ளனர்.

இதில், சாகர் சர்மா என்பவர் மட்டும் கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்து ஒத்திகை செய்ய முயற்சித்துள்ளார். ஆனால், மக்களவை வளாகத்துக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இவர்கள் மட்டும்தான் சதிதிட்டத்தை செய்தார்களா அல்லது இவர்கள் ஒன்றிணைந்த அந்த முகநூல் குழுவில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com