மகாராஷ்டிரத்தில் ஓடும் ரயிலில் 4 பேரை சுட்டுக்கொன்ற ரயில்வே காவலருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. கடந்த ஜூலை மாதம் சேதன்சின்ஹ் சௌதாரி எனும் காவலர் ஓடும் ரயிலில் தனது மூத்த அதிகாரி மற்றும் மூன்று பயணிகளை சுட்டுக்கொன்றதற்காக கைது செய்யப்பட்டார்.
குற்றவாளி, மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதாவும், மாயைகள் நிறைந்த உலகில் துன்புறுவதாகவும் ஜாமீனில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. அவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது கொண்டுள்ள கோவமும் வெறுப்பும் மட்டுமே இந்தக் குற்றச் செயலைத் தூண்டியுள்ளது என இந்த வழக்கை விசாரிக்கும் ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், இவருக்கு ஜாமீன் வழங்குவது சட்டத்தின் மீதான நம்பிக்கையைக் குழைக்கும், குறிப்பிட்ட சமுதாயத்தினரின் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கும் என ரயில்வே காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இதையும் படிக்க: மீண்டும்.. மீண்டுமா? நாட்டில் கரோனா பாதிப்பு நிலவரம்
இவரது ஜாமீனை எதிர்க்கும் கொலை செய்யப்பட்ட அஸ்கார் சாயிக் என்பவரது மனைவி, குற்றவாளி தீவிரவாத எண்ணம் கொண்டவர் எனவும் தேசத்தின் பாதுகாப்புக்கு அவரால் தீங்கு ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 31 நடந்த இந்த குற்றச் சம்பவத்தில் ஜெய்ப்பூர் - மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த குற்றவாளி, உதவி துணை கண்காணிப்பாளர் டிக்காராம் மீனாவையும் மூன்று இஸ்லாமியப் பயணிகளையும் சுட்டுக்கொன்றார்.
மேலும், 'இந்தியா இந்துக்களுக்கு மட்டுமே, இந்தியாவில் வாழ வேண்டும் என்றால் மோடிக்கு வாக்களியுங்கள்' எனக் கோஷம் எழுப்பியதாகக் கூறப்படுகிறது.