கர்நாக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் தூய்மைப் பணியாளர்களாக வேலை செய்யும் கோர்கா பழங்குடியின மக்களுக்கு, வாடகைக்கு வீடு கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வீடு வழங்கிய வீட்டு உரிமையாளர்களும் சாதி தெரிந்தபின் இரண்டு நாள்களுக்குள் வீட்டைக் காலி செய்ய வைத்துள்ள சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
பைந்தூரை சுத்தமாக வைப்பதற்காக உழைக்கும் மக்களுக்கு தங்குமிடம் அளிக்க, அப்பகுதி மக்களே மறுத்துவரும் பெரும் சமூக அநீதி கர்நாடக மாநிலத்தில் நடந்துவருகிறது.
25க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் டிசம்பர் 1-ஆம் நாள் முதல் உடுப்பி சிஎம்சி-யிலிருந்து பைந்தூருக்கு வேலை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் பைந்தூருக்கு இடம் பெயர்ந்த தூய்மைப் பணியாளர்களுக்கு சாதியின் பெயரால் வீடு மறுக்கப்படுகிறது. ஆரம்பத்தில் வீடு வழங்கிய வீட்டு உரிமையாளர்களும் சாதி தெரிந்தபின் பணியாளர்களை வீட்டை விட்டு வெளியேற்றுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையும் படிக்க: சிறையில் தாய், கதறி அழும் குழந்தையின் காணொலி!
இந்த சாதி பகுபாட்டினால் ஒடுக்குதலுக்கு உள்ளான தூய்மைப் பணியாளர்கள், வீடு கிடைக்காமல் உடுப்பியிலிருந்து பைந்தூருக்கு 100 ரூபாய் செலவழித்து, 70 கிலோ மீட்டர்கள் தினமும் பயணிக்கின்றனர். அதிகாலை 3 மணிக்கு வேலை துவங்க வேண்டிய இந்தப் பணியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்தப் பிரச்னை குறித்து பேசிய உடுப்பி துணை ஆணையர் டாக்டர். வித்யாகுமாரி, பைந்தூரில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான தங்குமிடங்களில் தூய்மைப் பணியாளர்களைத் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.