எதிர்க்கட்சியினர் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியின் விரக்தியில் பிரதமர் மோடியை அவமதித்து வருகின்றனர் என்று பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விகளால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக எதிர்க்கட்சியினர் பிரதமர் மோடியை அவமதித்து வருகின்றனர் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி விமர்சனம் செய்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அத்துமீறல் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி அமளியில் ஈடுபட்ட மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 92 பேர் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
அதையடுத்து அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியும், பிரதமர் மோடியின் படத்தை வைத்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைக் கண்டித்து பிரஹலாத் ஜோஷி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது, “பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. இதனால் எதிர்க்கட்சியினர் விரக்தி அடைந்துள்ளது அவர்களின் முகத்திலேயே தெரிகிறது. அதனால்தான் அவர்கள் இவ்வாறு நடந்து கொள்கின்றனர்.
இதையும் படிக்க | நீக்கப்பட்ட ஜவஹர்லால் நேரு புகைப்படம்! பாஜக மீது குற்றச்சாட்டு!
மோசமான முகமூடியை அணிந்து பிரதமர் மோடியை அவமதிப்பு செய்கின்றனர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரதமரின் போலி படத்தைக் கொண்டு வந்துள்ளனர். ஒட்டுமொத்த அவையும் இந்த செயல்களை கண்டித்துள்ளது. பிரதமரை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.