புதுதில்லி: கிண்டல் செய்த எம்.பி. கல்யாண் பானர்ஜியையும், அவரை கண்டிக்காமல் விடியோ எடுத்த ராகுல் காந்தியையும் மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் சாடியுள்ளார்.
பாதுகாப்பு அத்துமீறல் விவகாரம் தொடா்பாக அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மற்றும் மாநிலங்களவை சேர்ந்த எதிர்க்கட்சிகளின் உறுப்பினா்கள் 92 பேர் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை இடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் பதாகைகளை ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின் போது, திரிணமூல் காங்கிரஸின் எம்பி கல்யாண் பானர்ஜி, மாநிலங்களவை தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜகதீப் தன்கர் அவை நடவடிக்கையின்போது செய்வதை போன்று நகைச்சுவையாக அனைவரின் முன்னிலையில் செய்து காட்டினார். அங்கிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தனது செல்போனில் இதனை விடியோ எடுத்தார்.
கல்யாண் பானர்ஜியின் இந்தச் செயலையும், இதை தடுக்காத ராகுல் காந்தியையும் ஆளும் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மாநிலங்களவையில் ஜகதீப் தன்கர் பேசுகையில்,
“மாநிலங்களவைத் தலைவருக்கும், மக்களவைத் தலைவருக்கும் வேறுபாடு உண்டு. அரசியல் கட்சிகளுக்குள் பரிமாற்றங்கள் இருக்கலாம். ஆனால், மாநிலங்களவைத் தலைவரை கேலி செய்யும் எம்பியை மற்றொரு கட்சியின் மூத்த தலைவர் விடியோ எடுக்கிறார். இது ஏற்றுக் கொள்ள முடியாதது. ஆபத்தானது, வெட்கக்கேடானது.” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து மாநிலங்களவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.