மத்தியப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினர்கள் டெஸ்ட் மற்றும் டி-20 கிரிக்கெட் அணியினரைப் போன்று தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பாஜக பொதுச்செயலாளரும் அமைச்சருமான கைலாஷ் விஜய்வர்கையா தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து பாஜகவின் புதிய முதல்வராக புதிய முதல்வராக இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை (ஓபிசி) சோ்ந்த மோகன் யாதவ் (58) டிச. 13ஆம் தேதி பொறுப்பேற்றார். துணை முதல்வா்களாக ஜகதீஷ் தேவ்டா, ராஜேந்திர சுக்லா ஆகியோரும் பதவியேற்றனா்.
அதனைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச சட்டப்பேரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றது. இதில், 28 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதிவியேற்பு விழாவில், அமைச்சர்கள் அனைவருக்கும் ஆளுநர் மங்குபாய் படேல் பதிவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
கைலாஷ் விஜய்வர்கையா, விஜய் ஷா, பிரஹலாத் படேல், கரண் சிங், ராகேஷ் சிங் உள்ளிட்ட பலர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.
பதவியேற்புக்கு பிறகு பேசிய அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கையா, மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் அனைத்து விதமான மக்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் மற்றும் டி-20 அணியினரைப் போன்று இளம் மற்றும் மூத்த உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் வளர்ச்சிக்காக அனைவரும் பாடுபடுவோம் எனக் குறிப்பிட்டார்.