மத்தியப் பிரதேச காங்கிரஸ் செயற்குழுவைக் கலைப்பதற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவெடுத்துள்ளதாக அம்மாநிலத்திற்கான பொறுப்பாளரும், பொதுச் செயலாளருமான ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டம் முடிந்தபிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, “மத்தியப் பிரதேச காங்கிரஸ் செயற்குழுவை கலைப்பதற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவெடுத்துள்ளது.
அடுத்த அறிவிப்பு வரும்வரை மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் இணைப் பொறுப்பாளர்கள் அவர்களின் பணிகளைத் தொடர்வார்கள்.” என்று தெரிவித்தார்.
புதிதாக நியமிக்கப்பட்ட மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜித்து பட்வாரி, மாநிலங்களவை உறுப்பினர் திக்விஜய் சிங், முன்னாள் மத்திய அமைச்சர்கள் காந்திலால், சுரேஷ் பச்சோரி, அருண் யாதவ் உள்ளிட்ட பல தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டப்பேரவைக்கு நவம்பரில் தேர்தல் நடைபெற்றது. இதில் 163 தொகுதிகளில் வெற்றிபெற்று பாஜக ஆட்சியைத் தக்கவைத்தது. காங்கிரஸ் கட்சி வெறும் 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றியடைந்தது.
அதனையடுத்து மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவராக கமல்நாத்துக்கு பதில் ஜித்து பட்வாரியை நியமனம் செய்தது குறிப்பிடத்தக்கது.