கர்நாடகத்தில் உள்ள ஹோராபைலு கிராமத்தில் தலித் பெண்ணைத் திருமணம் செய்த நபரையும், அந்தக் குடும்பத்தையும் அந்தப் பகுதி மக்கள் தனிமைப்படுத்தியுள்ள தீண்டாமைக் குற்றம் அரங்கேறியுள்ளது.
அந்தப் பகுதியில் உள்ள சாதியத் தலைவர்களின் தலைமையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. யாரும் அந்தக் குடும்பத்தினருடன் பேசக்கூடாது, எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது, ஊர் கோயிலில் நடக்கும் விழாக்களுக்கு அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இந்த விதிகளை மீறுபவர்களுக்கு ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் எனவும் விதியை மீறுபவர்கள் தொடர்பான தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.500 சன்மானம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அயோத்தி பயணம் ஒத்திவைப்பு!
அந்தப் பகுதியில் வசித்துவந்த தினேஷ் மற்றும் பிரீத்தி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். தினேஷின் குடும்பமும் பிரீத்தியை ஏற்றுக்கொண்டது. ஆனால் அந்த கிராமத்தில் அதிகமாக இருக்கும் 'ஜோகி' பிரிவினரால் இந்த சமூக சமநிலையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இதையறிந்த தினேஷின் சமூகத்தைச் சேர்ந்த மற்ற குடும்பத்தினர் இந்தக் குடும்பத்தை ஒதுக்கி வைத்துள்ளனர். மனைவி பிரீத்தி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய டிஎஸ்எஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹலேஷப்பா, 'இந்த ஜோகி சமூகத்தைச் சேர்ந்த சிலர் போலியாக தாழ்த்தப்பட்டோர் சான்றிதழ்களைத் தயார் செய்து அரசின் சலுகைகளைப் பெற்று வருகின்றனர்.
இதையும் படிக்க: காங்கிரஸுக்கு வயது 139..!
சலுகைகளப்பெற தங்களை தாழ்த்தப்பட்டவர்களாகக் காட்டிக்கொள்ளும் இவர்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஏற்றுக்கொள்வதில் அவ்வளவு கௌரவம் காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லையெனில் மேல்முறையீடுகள் செய்யப்பட்டும் என டிஎஸ்எஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.