ஜம்மு-காஷ்மீரின் டிஜிபி ஆர்.ஆர்.ஸ்வைன், 2023-ம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் விபரங்களை அளித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது:
“ஒட்டுமொத்தமாக 55 வெளிநாட்டவர்கள் உள்பட 76 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், பயங்கரவாதிகளுக்கு உதவி செய்பவர்கள் 291 பேர் மற்றும் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட 201 பேர் மீது பொது பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் வழக்குப் பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
“நீண்ட நாள்களாகப் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்த 31 உள்ளூர் தீவிரவாதிகள் அந்தப் பகுதியை விட்டு வெளியே சென்றுள்ளனர்.
“இந்தாண்டு பொதுமக்கள் 14 பேர், பயங்கரவதிகளால் உயிரிழந்தனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 63 சதவிகிதம் சட்ட விரோத செயல்கள் குறைந்துள்ளன.
“பயங்கரவாதக் குழுக்கள் ஆள் சேர்ப்பதும் தடைப்பட்டுள்ளது. தாக்குதல்களில் 4 காவல் அதிகாரிகள் மற்றும் ஒரு டிஎஸ்பி, ஒரு காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பலியாகியுள்ளனர்.
“89 பயங்கரவாத திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளன. 18 பயங்கரவாதிகள் தஞ்சமடையும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ரூ.170 கோடி மதிப்புள்ள நிலம், கட்டடங்கள் உள்பட 99 சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதிகளுக்குத் தொடர்புடைய 68 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: எந்த அழைப்பும் வரவில்லை: சித்தராமையா
“மேலும், பயங்கரவாதம் மற்றும் பிரிவினை கருத்துகளைப் பரப்பும் 8 ஆயிரம் சமூக ஊடக கணக்குகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.