மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடியின் உரைக்கு இடையூறு செய்ய எதிர்க்கட்சிகள் சதி செய்ததாகவும், அதனை முறியடித்து நாட்டிற்கு பிரதமர் மோடி ஊக்கமளிப்பதாகவும் பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாஜகவின் முதன்மை செய்தித் தொடர்பாளர் அனில் பலூனி கூறியதாவது: மக்களவையில் நேற்று (பிப்ரவரி 8) பிரதமரின் உரைக்கு இடையூறு செய்ய நினைத்த எதிர்க்கட்சிகளின் சதிச் செயல்களை பிரதமர் மோடி தகர்த்துள்ளார். எதிர்க்கட்சிகள் செய்யும் தேசத்திற்கு எதிரான அரசியலை பிரதமர் முறியடித்துள்ளார். அதன் காரணத்தினாலேயே எதிர்க்கட்சிகள் அவரது உரைக்கு தொடர்ந்து இடையூறு செய்தன.
இதையும் படிக்க: ரொட்டி சுடும் பில்கேட்ஸ்! இந்திய இசையமைப்பாளர் பாடலுடன்...
இருப்பினும், பிரதமரின் உரை இந்தியாவின் 140 கோடி மக்களையும் பெருமையாக நினைக்க வைத்துள்ளது. எதிர்க்கட்சிகள் சார்பில் தொடுக்கப்பட்ட ஒவ்வொரு தாக்குதலுக்கும் பிரதமர் பதிலடி கொடுத்துள்ளார். அவரது தலைமையிலான அரசு வளர்ச்சிப் பாதையில் நடைபோட்டு கொண்டிருக்கிறது என்றார்.
முன்னதாக, நீங்கள் எவ்வளவு சேற்றை வாரி இறைத்தாலும் பாஜகவின் தாமரை மலர்ந்தே தீரும் எனப் பிரதமர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.