எகிப்து: கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 குழந்தைகள் பலி, பலர் காயம்
வடக்கு எகிப்து பகுதியில் நான்கு அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மேலும், 20-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இந்த கட்டட விபத்து எகிப்தின் நைல் டெல்டா நகரமான டாமன்ஹாரில் நிகழ்ந்துள்ளது. இந்த கட்டட விபத்துக்கு முன்னதாக எரிவாயு உருளை வெடிப்பு சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் கட்டட இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படு அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: ‘சினிமா இவ்வளவு கடினம் எனத் தெரியாது’: நடிகர் விஜய் சேதுபதி
இது தொடர்பாக அதிகாரிகள் கூறியிருப்பதாவது: கட்டடங்கள் இடிந்து விழும் விபத்துகள் எகிப்தில் பொதுவான ஒன்று. அதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது தரமற்ற கட்டுமானங்கள் மற்றும் கட்டடங்களில் சரிவர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாமல் இருப்பதே ஆகும். இந்த விபத்துகளை எகிப்தின் கிராமப்புறங்களில் அதிகமாகக் காண முடியும். கடந்த மாதத்தில் தெற்கு எகிப்தில் உள்ள நகரம் ஒன்றில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். கடந்த சில ஆண்டுகளாக சட்ட விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடிக்கும் பணியில் எகிப்து அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்றனர்.