சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் காவல் உளவாளி என்ற சந்தேகத்தின்பேரில், முன்னாள் கிராமத் தலைவர் ஒருவர் நக்சலைட்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
பர்சூர் காவல் நிலையத்திற்குள்பட்ட துல்துலி கிராமத்திற்கு அருகிலுள்ள வனத்தில் கொலை நடந்ததாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
முன்னாள் கிராமத் தலைவர் ராம்தர் அலாமி ஹிட்டாமேட்டா கிராமத்தில் வசிப்பவர் ஆவார், நக்சல்கள் அலாமியின் உடல் அருகே சில துண்டுப் பிரசுரங்களை விட்டுச் சென்றனர். அதில் காவல் உளவாளியாக பணிபுரிந்தாகவும், பணத்திற்காக போத்காட் அணைத் திட்டத்தை ஊக்குவித்ததாகவும் அந்த அதிகாரி கூறினார்.
அலாமிக்கு நக்சலைட்டுகள் பலமுறை எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
மாநிலத்தில் கடந்த சில நாள்களாக நக்சலைட்டுகளால் அரசியல் தலைவர்கள் கொலைசெய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
முன்னதாக பிப்ரவரி 5ஆம் தேதி, பிஜப்பூரில் உள்ள பாஜகவின் அவபல்லி மண்டல் தலைவர் நீலகந்த் ககேம் நக்சலைட்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
ஐந்து நாள்களுக்குப் பிறகு, காவி கட்சியின் நாராயண்பூர் மாவட்டப் பிரிவின் துணைத் தலைவர் சாகர் சாஹு, நக்சலைடுகளால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று காவல்துறை கூறியது.