மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார்.
மேகாலயாவில் உள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி வாக்குப் பதிவும், மார்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜகவின் வாக்குறுதிகளை ஜெ.பி. நட்டா இன்று வெளியிட்டார்.
அப்போது அவர் பேசுகையில், மேகாலயாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் 7வது ஊதியக் குழு அமல்படுத்தப்படும். பெண் குழந்தை பிறந்தால் ரூ.50,000 மதிப்பிலான பத்திரம் வழங்கப்படும் என்றார்.
மேலும், பெண் குழந்தைகளுக்கு மழலைக் கல்வி முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வியும், ஒற்றைத் தாய் மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ. 24,000 உதவித் தொகை வழங்கப்படும் என்று நட்டா தெரிவித்தார்.
முன்னதாக கடந்த வாரம் காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் குடும்பத்தின் தலைவர் பெண்ணாக இருந்தால் மாதம் ரூ.3,000, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, இலவச மருத்துவம் உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கினர்.