சட்டப் பேரவைத் தேர்தலை சந்திக்க உள்ள கர்நாடகத்துக்கு இரண்டு நாள் பயணமாக பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா வருகை தந்து கர்நாடகத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார்.
கர்நாடகத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடப்பதற்கான வாய்ப்புள்ளது. இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தங்களது கட்சியினை பலப்படுத்தி தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பாஜகவின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா இரண்டு நாள் பயணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் கர்நாடகத்துக்கு வருகை தந்து சட்டப்பேரவைத் தேர்தலுக்காக கட்சியினைப் பலப்படுத்தும் முயற்சியில் இறங்கவுள்ளார்.
இதையும் படிக்க: இணையத்தை ஆக்கிரமிக்கும் கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள்!
இது குறித்து கர்நாடகத்தின் பாஜக பொதுச் செயலாளர் என்.ரவிக்குமார் கூறியதாவது: பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா இன்று (பிப்ரவரி 19) இரவு மங்களூருக்கு வருகை தரவுள்ளார். அவர் அடுத்த இரண்டு நாட்களில் கர்நாடகத்தின் உடுப்பி, சிக்கமகளூரு மற்றும் ஹாசன் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். நாளை (பிப்ரவரி 20) காலை உடுப்பியில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார். அதன்பின், மதியம் பிந்தூரில் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொள்ள உள்ளார். மாலை சிக்கமகளூரில் நடைபெறும் கூட்டத்திலும் கலந்து கொள்ள உள்ளார். நாளை மறுநாள் ஹாசன் மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். உடுப்பி மற்றும் சிக்கமகளூருவில் பாஜக வலுவாக உள்ளது. ஆனால், சிக்கமகளூரின் சிரிங்கேரியில் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்துகிறது. அங்கும் ஜெ.பி.நட்டா பார்வையிட உள்ளார். பின்னர், விமானம் மூலம் தில்லிக்குத் திரும்புகிறார் என்றார்.