ஓலா, ஊபர், ரேபிடோ உள்ளிட்ட செயலிகள் மூலம் இயங்கும் டாக்ஸி சேவையில், பைக் டாக்ஸி சேவைக்கு உடனடியாக தடை விதித்து புது தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
புது தில்லியில் மிகவும் பிரபலமானதாக அறியப்படும் பைக் டாக்ஸி சேவைக்கு தடை விதித்திருப்பது, பயணிகளையும், ஓட்டுநர்களையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
இது குறித்து தில்லி போக்குவரத்துத் துறை வெளியிட்டிருக்கும் உத்தரவில், போக்குவரத்து அல்லாத (தனிநபர்) பதிவு எண்கள் கொண்ட இரு சக்கர வாகனங்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படுகின்றன என்று கூறப்பட்டுள்ளது.
அதாவது, தில்லி அரசின் உத்தரவு கூறுவது என்னவென்றால், தனிநபர் பயன்பாட்டுக்காக பதிவு செய்யப்படும் வாகனங்கள் வணிக நோக்கத்தோடு பயன்படுத்தப்படுகின்றன. இது மோட்டார் வாகனச் சட்டம், 1988க்கு விரோதமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி அரசின் இந்த நடவடிக்கையால், ஓலா, ஊபர், ரேபிடோ மூலம் குறைந்த கட்டணத்தில் இரு சக்கர வாகனங்களில் பயணித்து வந்த பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தில்லி போக்குவரத்து நெரிசலில், இரு சக்கர வாகனங்கள் எளிதாக கடந்து விடலாம் என்பதால் பலரும் இந்த சேவையை அதிகமாக பயன்படுத்தி வந்த நிலையில், இதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆனால், இன்னமும் சில செயலிகளில் இந்த சேவை வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே, இந்த சேவையை வழங்கினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும், இரண்டாவது முறை சிக்கினால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.