சினிமா பாணியில்.. ஜாகுவாரில் சென்னை வந்து 1000 ரூபாய், காலணிகளை திருடிய கொள்ளையர்கள்

சினிமா பாணியில், உத்தரப்பிரதேசத்திலிருந்து ஒரு ஜாகுவார் காரில் ரூ.80,000க்கு எரிபொருள் நிரப்பிக் கொண்டு கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு சென்னை வந்தவர்களில் இருவர் சிக்கினர்.
கோப்பிலிருந்து..
கோப்பிலிருந்து..

சென்னை: சினிமா பாணியில், உத்தரப்பிரதேசத்திலிருந்து ஒரு ஜாகுவார் காரில் ரூ.80,000க்கு எரிபொருள் நிரப்பிக் கொண்டு கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு சென்னை வந்தவர்களில் இருவர் சிக்கினர்.

ஈசிஆர் சாலையில் ஒரு வீட்டில் ரூ.1,000 மற்றும் இரண்டு ஜோடி செருப்புகளைக் கொள்ளையடித்த நிலையில் காவல்துறையிடம் சிக்கியுள்ளனர்.

இந்த ஜாகுவார் கார் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபருடையது என்பதும், சரியாக மாதத் தவணை செலுத்தாததால், பறிமுதல் செய்துவிடுவார்களோ என்று ரௌடிகளிடம் அவர் இந்தக் காரை கொடுத்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

இது குறித்து காவல்துறையினர் கூறியதாவது, உத்தரப்பிரதேசத்திலிருந்து வந்த கொள்ளையர்கள் புனித் குமார் மற்றும் ராஜேஷ் குமார் யாதவ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தலைவனாக செயல்பட்ட இர்ஃபான்  மற்றும் சுனில் குமார் யாதவை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

இர்ஃபான் மனைவி பஞ்சாயத்துத் தலைவராக இருப்பதாகவும், அவர் கொள்ளையடித்துச் செல்லும் பொருள்களை எல்லாம், கிராமத்தில் இருக்கும் ஏழைகளுக்கு அளிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பதாகவும், பள்ளிக் குழந்தைகளுக்கு கட்டணம் செலுத்துவது, கண் சிகிச்சைக்கு நன்கொடை அளிப்பது போன்றவற்றில் ஈடுபட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இர்பான் நாடு முழுவதும் பல்வேறு கொள்ளை வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். இவர் தனபால் சிங்கிடமிருந்து ஜாகுவார் காரை வாங்கியுள்ளனர். 

பிறகு இந்த ஜாகுவார் காரை எடுத்துக் கொண்டு ரூ.80,000க்கு எரிபொருள் நிரப்பிக் கொண்டு, சென்னை வந்து இங்குள்ள தொழிலதிபர்களின் வீடுகளில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டுள்ளனர். அதன்படி சென்னை வந்து நீலாங்கரையில் உள்ள வீடுகளை நோட்டமிட்டுள்ளனர்.

பிப்ரவரி 6ஆம் தேதி இர்பான் தனது கூட்டாளிகளுடன் ஒரு வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். ஆனால் காவலாளி கூச்சலிட்டதால் அங்கிருந்து தப்பியோடி வந்துள்ளனர். மற்றொரு வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். அங்கு எதுவுமே இல்லை. சுல்தான் என்பவருக்குச் சொந்தமான அந்த வீட்டில் வெறும் 1000 ரூபாய் ரொக்கம் மற்றும் சில காலணிகளை திருடிக் கொண்டு வெளியே வந்துள்ளனர்.

இது குறித்து சுல்தான் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார். சிசிடிவி காட்சிகளைக் கொண்டு பிப்ரவரி 6ஆம் தேதி இரவு ஒரு ஜாகுவார் கார் அப்பகுதியை சுற்றி சுற்றி வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

உடனடியாக கார் எண்ணைக் கொண்டு தனபாலை தொடர்பு கொண்டு பேசினர். இதற்குள் அந்தக் கார் தடா சுங்கச்சாவடியை தாண்டியதை அறிந்தனர். ஆனால் அந்த காரின் நம்பர் பிளேட் மாற்றப்பட்டுள்ளது. தொடர் விசாரணை நடத்திய காவல்துறையினர், உத்தரப்பிரதேசம் சென்று சுனில் குமாரின் சகோதரர் ராஜேஷ் குமார் மற்றும் புனித் குமாரை கைது செய்தனர். கொள்ளைக் கூட்டத் தலைவன் இர்ஃபானை தேடி வருகிறார்கள்.

80,000 ரூபாய்க்கு எரிபொருள் நிரப்பிக் கொண்டு சென்னை வந்த கொள்ளையர்கள் குறித்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com