ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்திற்கு சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வரும் 2024 மக்களவை தேர்தலையொட்டி, நாடு முழுவதும் உள்ள மக்களை ஒன்றிணைக்கும் வகையில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை(பாரத் ஜோடோ யாத்ரா) காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் 7-ல் தொடங்கிய பயணம் கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து தலைநகர் தில்லியை அடைந்துள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு ஜன. 2வரை நடைப்பயணத்திற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் நாளை தொடங்கும் நடைப்பயணம் உத்தரப் பிரதேச மாநிலம் வழியாக பஞ்சாபை கடந்து காஷ்மீர் சென்றடைகிறது.
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் நடைபெறும் நடைப்பயணத்தில் கலந்து கொள்வதற்காக அம்மாநில முன்னாள் முதல்வர்கள் அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதிக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, நடைப்பயணத்திற்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி தெரிவித்து அகிலேஷ் யாதவ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், நடைப்பயணம் வெற்றிபெற வாழ்த்துகிறேன். நம் நாட்டின் கலாசாரத்தை பாதுகாக்கும் இலக்கை இந்த நடைப்பயணம் அடையும் என்று நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், நடைப்பயணத்தில் அகிலேஷ் யாதவ் பங்கேற்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
ஜம்மு - காஷ்மீரை அடையும் நடைப்பயணத்தில் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, ஃபரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் தாரிகாமி ஆகியோர் பங்கேற்க இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.