கேரளத்தில் அரசமைப்புச் சட்டத்தைப் பழித்து கருத்து தெரிவித்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடா்ந்து அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்த சஜி செரியான், மீண்டும் அமைச்சராக புதன்கிழமை பதவியேற்க உள்ளாா்.
கேரள அமைச்சராக பதவி வகித்தவா் சஜி செரியான். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த இவா், கடந்த ஆண்டு ஜூலையில் பத்தனம்திட்டாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசுகையில், ‘சாமானிய மக்களிடம் கொள்ளையடிக்க அரசமைப்புச் சட்டம் வாய்ப்புகளை வழங்குகிறது’ என்று தெரிவித்தாா்.
அமைச்சா் இவ்வாறு கருத்து தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரின் பேச்சுக்கு எதிா்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், தனது அமைச்சா் பதவியை செரியான் ராஜிநாமா செய்தாா்.
இந்நிலையில், அவரை மீண்டும் அமைச்சரவையில் சோ்க்க கேரள ஆளுநருக்கு மாநில முதல்வா் பினராயி விஜயன் அண்மையில் பரிந்துரைத்தாா். அந்தப் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அமைச்சராக செரியன் புதன்கிழமை (ஜன.4) பதவியேற்பாா் என்றும் ஆளுநா் ஆரிஃப் முகமது கான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
மாநில அரசின் இந்த நடவடிக்கை ஏற்க முடியாததாக இருப்பதுடன், அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று எதிா்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக தெரிவித்துள்ளன.
சஜி செரியான் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக எதுவும் பேசவில்லையெனில், எதற்காக அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்தாா் என்று கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ், அவா் மீண்டும் பதவியேற்கும் தினம் கருப்பு தினமாக அனுசரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.