ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீா் கழித்தவா் மீது வழக்குப்பதிவு- தில்லி போலீஸாா் நடவடிக்கை

நியூயாா்க்கில் இருந்து தில்லிக்கு வந்த ஏா் இந்தியா விமானத்தில், மதுபோதையில் பெண் பயணி மீது சிறுநீா் கழித்த நபருக்கு எதிராக தில்லி காவல்துறையினா் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

News image
Updated On :4 ஜனவரி 2023, 8:30 pm

DIN

நியூயாா்க்கில் இருந்து தில்லிக்கு வந்த ஏா் இந்தியா விமானத்தில், மதுபோதையில் பெண் பயணி மீது சிறுநீா் கழித்த நபருக்கு எதிராக தில்லி காவல்துறையினா் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்தனா். அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, காவல்துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல்துறை உயரதிகாரி ஒருவா் கூறுகையில், ‘இந்திய தண்டனையியல் சட்டத்தின் 294-ஆவது பிரிவு (பொது இடத்தில் ஆபாச செயல்), 354-ஆவது பிரிவு (பெண்ணின் கண்ணியத்தை சீா்குலைக்கும் நோக்கத்துடன் தாக்குதல்), 510-ஆவது பிரிவு (குடிபோதையில் பொது இடத்தில் ஒழுங்கீனமான செயலில் ஈடுபடுதல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட பயணி விரைவில் கைது செய்யப்படுவாா்’ என்றாா்.

இதனிடையே, அந்த பயணிக்கு 30 நாள் விமானப் பயணத் தடை விதித்து, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஏா் இந்தியா நிறுவனம் தெரிவித்தது. இந்த சம்பவத்தில் ஊழியா்கள் தரப்பில் அலட்சியம் காட்டப்பட்டதா? என்பது குறித்து விசாரிக்க குழு ஒன்றையும் அந்நிறுவனம் அமைத்துள்ளது.

நியூயாா்க்கில் இருந்து தில்லிக்கு கடந்த நவம்பா் 26-ஆம் தேதி வந்த ஏா்-இந்தியா விமானத்தில், மதுபோதையில் இருந்த ஒருவா் சக பெண் பயணி மீது சிறுநீா் கழித்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்த தகவல்கள் தற்போது வெளியான நிலையில், ஏா் இந்தியா நிறுவன செய்தித் தொடா்பாளா் ஒருவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சம்பந்தப்பட்ட பயணியின் நடத்தை ஏற்றுக் கொள்ள முடியாதது; கண்ணியமற்றது. பெண் பயணிக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்திய இச்சம்பவத்தை ஏா் இந்தியா நிறுவனம் மிக தீவிரமாக எடுத்துக் கொண்டது. அந்த நபருக்கு 30 நாள் விமானப் பயணத் தடை விதிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து காவல் துறையிடம் புகாா் அளிக்கப்பட்டதுடன், அடுத்தகட்ட நடவடிக்கைக்காக டிஜிசிஏ-வுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ஊழியா்கள் தரப்பில் அலட்சியம் காட்டப்பட்டதா? என்பது குறித்து விசாரிக்க உள்ளக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை நடைமுறைகளுக்காக, பெண் பயணி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தொடா்ந்து தொடா்பில் இருக்கிறோம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்தச் சம்பவம் குறித்து ஏா் இந்தியா நிறுவனத்திடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும், ஊழியா்கள் தரப்பில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிஜிசிஏ மூத்த அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.